நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் கடந்த 6 மாதங்களாகஈரோடு மாவட்டம் பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கார்த்திக் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்ட கார்த்திக் உறவினர்கள் திடீரென கார்த்திக் உடலை வாங்க மறுத்து ஈ.வி.என் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கார்த்திக் உறவினர்கள் கூறும்போது, 'கார்த்திக்கின் 2கை மணிக்கட்டும் அறுக்கப்பட்டு ரத்த காயம் உள்ளது. எனவே அவரது இறப்பில் மர்மம் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினர். இதைத் தொடர்ந்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் கார்த்திக் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.