Govt school  students 100 times  for not submitting certificates

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றுகள் கொடுக்காத பள்ளி மாணவிகளை இன்று (16.06.2025) வெயிலில் சுடு மணலில் 100 முறை தோப்புக்கரணம் போடச் சொன்ன ஆசிரியர் நாளை (17.06.2025) சான்றுகள் கொண்டு வரவில்லை என்றால் 200 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். தோப்புக்கரணம் போட்ட மாணவிகள் சிலருக்குக் காய்ச்சல் வந்து சிகிச்சையில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பள்ளி மாணவிகளிடம் ஜாதி, வருமானம், இருப்பிடம், பிறப்பு சான்று, ஆதார், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களைப் பள்ளி நிர்வாகத்தில் இருந்து கேட்டதுடன் ஒவ்வொரு மாணவியும் தலா ரூ.500 கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று ஆசிரியர்கள் கேட்ட ஆவணங்களைக் கொண்டு செல்லாத ஏராளமான மாணவிகளை வகுப்பறைகளுக்கு வெளியே வெயிலில் சுடு மணலில் 100 முறை மூட்டிப் போட வைத்து பிறகு வகுப்புகளுக்குள் அனுமதித்துள்ளனர். இதனால் பல மாணவிகள் வலியால் அவதிப்பட்டதுடன் அவமானத்திலும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதில் சில மாணவிகளுக்குக் காய்ச்சலும் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது குறித்து சில மாணவிகளின் பெற்றோர்கள் கூறும் போது, “பள்ளியில் கேட்ட சான்றுகளை வாங்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. பலர் விண்ணப்பித்துள்ளனர். பலர் விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில் பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் இந்த சான்றுகளுக்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. சான்று கொண்டு போகாத மாணவிகளை இன்று வெளியில் நிறுத்தி 100 முறை முட்டி போட வைத்தவர்கள் நாளை 200 முறை முட்டி போடச் சொல்லி இருக்காங்க. இதனால் மாணவிகள் வீட்டில் வந்து அழுகிறார்கள். ஆசிரியர்கள் மற்ற மாணவிகள் மத்தியில் மாணவிகளை இப்படியெல்லாம் செய்ததால் பலர் மன உளைச்சலில் உள்ளனர். இதனைக் கேட்க நாளை பெற்றோர்கள் பள்ளிக்குப் போகிறோம்” என்றனர்.