Govt school student special guest Republic Day celebrations Delhi

ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி அ.பிருந்தா, வீர் கதா போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வீர் கதா போட்டியை நடத்தி வருகின்றன. இதில் முதல் இந்திய சுதந்தரிப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து அதன்மூலம் நாட்டுப்பற்றையும், குடிமை உணர்வையும் அவர்களிடம் வளர்க்கும் நோக்கில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.

Govt school student special guest Republic Day celebrations Delhi

Advertisment

இந்தாண்டு நடந்த போட்டியில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.31 லட்சம் பள்ளிகளிருந்து சுமார் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 3-5, 6-8, 9-10, 11-12 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் அய்யாத்துரை என்பவர் மகள் அ.பிருந்தா, 9-10 வகுப்பு பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க.வளர்மதியின் வழிகாட்டுதலில் 'ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்.

இந்த நிலையில், மாணவி அ.பிருந்தா, ரூபாய் 10 ஆயிரம் பரிசும், புதுடெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பு விருந்தினராக நேரில் காணும் வாய்ப்பும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா மட்டும்தான் அரசு பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி அ.பிருந்தா, வழிகாட்டிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராசு, பள்ளித் தலைமையாசிரியர் ச.யுனைசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.