குடியரசு தின விழாவில் அரசுப் பள்ளி மாணவி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு; அமைச்சர் பாராட்டு!

govt school girl participation as special guest in Republic Day function Praise the Minister

ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி அ. பிருந்தா. இவர் வீர் கதா போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வீர் கதா போட்டியை நடத்தி வருகின்றன. இதில் முதல் இந்திய சுதந்திரப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து அதன்மூலம் நாட்டுப்பற்றையும், குடிமை உணர்வையும் அவர்களிடம் வளர்க்கும் நோக்கில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.

இந்தாண்டு நடந்த போட்டியில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.31 லட்சம் பள்ளிகளிருந்து சுமார் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 3ஆம் வகுப்பு முதல் - 5ஆம் வகுப்பு வரை, 6ஆம் வகுப்பு முதல் - ஆம் வகுப்பு வரை8, 9ஆம் வகுப்பு முதல்- 10ஆம் வகுப்பு வரை, 11ஆம் வகுப்பு முதல் - 12ஆம் வகுப்பு வரை என ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் அய்யாத்துரை என்பவர் மகள் அ.பிருந்தா, 9ஆம் வகுப்பு முதல்- 10ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும், பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க. வளர்மதியின் வழிகாட்டுதலில், ‘ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். இதன் மூலம் மாணவி அ.பிருந்தா, ரூபாய் 10 ஆயிரம் பரிசும், புதுடெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பு விருந்தினராக நேரில் காணும் வாய்ப்பும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா மட்டும்தான் அரசு பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி அ.பிருந்தா, வழிகாட்டிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராசு, பள்ளித் தலைமையாசிரியர் ச.யுனைசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

இந்த செய்தியை வியாழக் கிழமை நக்கீரன் இணையத்தில் வெளியிட்டிருந்தோம். நக்கீரன் இணைய செய்தியை பார்த்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக் கிழமை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் இருந்து டெல்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் ஒரே அரசுப் பள்ளி மாணவி அ.பிருந்தாவிடம் பேச வேண்டும் என்று அவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லியில் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள மாணவியிடமும் அவரது தந்தையிடமும் பேசிய அமைச்சர் மாணவிக்கு சாதனைக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

govt school girl participation as special guest in Republic Day function Praise the Minister

அப்போது, தொடர்ந்து சாதித்து அரசுப் பள்ளிக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் விழா முடிந்து சென்னை வரும் போது நேரில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். நக்கீரன் இணையச் செய்தியைப் பார்த்து அமைச்சர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டதை நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் பகிர்ந்து வருகிறார். விரைவில் மாணவி பிருந்தா மற்றும் அவரது பெற்றோர், வழிகாட்டி ஆசிரியை, தலைமை உள்பட கல்வித்துறையினர் அமைச்சரை சந்திக்க உள்ளனர்.

Delhi Ramanathapuram
இதையும் படியுங்கள்
Subscribe