Skip to main content

உடல் உறுப்புகள் தானம்; தொழிலாளிக்கு அரசு முதல் மரியாதை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Govt first honor to worker who donated  organs.

 

இறந்தும் உயிர் கொடுத்த அந்த மாமனிதரின் உடலுக்கு தேசத்தில் எங்குமே அளிக்கப்படாத அரசு மரியாதையை முதன்முதலாக வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அந்த முதல் அரசு மரியாதை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் உறுப்பு தானம் செய்தவருக்கு முதன்முதலாகத் தரப்பட்டிருக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45) அருகிலுள்ள ராஜபாளையம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்த ஏழைத் தொழிலாளி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பன் அந்தப் பணியிலிருந்து விலகி ஊரிலுள்ள கறிக்கடையில் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 07ம் தேதியன்று வேலை முடித்துவிட்டு வந்த மாரியப்பன் சாலையோரம் ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த போது, ஸ்பீடாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அவர்மீது  மோதி தூக்கி வீசியதில் தரையில் அவர் தலைமோதி கடுமையாக அடிபட்டு மயக்க நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு ஆரம்ப கட்ட சிகிச்சையளிக்கப்பட்டு பின் உடனடியான மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

 

நெல்லை அரசு மருத்துவமனையில் மாரியப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்திருந்ததையும், அதன் செயல்பாட்டையும் அவரது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தினர். மாரியப்பனுக்கு நேர்ந்ததை எண்ணி கலங்கி கண்ணீர் வடித்த அவரது குடும்பத்தினர் மனதைத் தேற்றிக்கொண்டு, அவர் நடுத்தர வயதுடையவர் என்பதால் அவரது பிற உறுப்புகளாவது யாருக்காகவாவது பயன்படட்டும் என்ற உன்னத முடிவில், மாரியப்பனின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலனுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Govt first honor to worker who donated  organs.

 

பின்னர் அவரது தலைமையிலான மருத்துவக் குழுவினர், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தொழிலாளி மாரியப்பனின் உடல் உறுப்புகளான கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவற்றை திசு அறுவை சிகிச்சையின் மூலம் பக்குவமாகப் பிரித்தெடுத்தனர். அதன்பின் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் முறைப்படி வழங்கப்பட்டது.

 

இவையனைத்தும் முடிக்கப்பட்ட பின்னர் 10ம் தேதியன்று தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்த மாரியப்பன் உடலுக்கு மருத்துவமனை டீன் ரேவதி பாலன் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து முதல் அரசு மரியாதையாக இறுதி அஞ்சலி செலுத்தி உடலை அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட மாரியப்பனின் உடல், அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவிருக்கிற அவரது சேத்தூர் கிராமத்திற்குக் கொண்டு செல்கிறபோது, நெல்லை அரசு மருத்துவமனையின் நூற்றுக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் வழிநெடுக வரிசையாக நின்று கண்ணீருடன் இறுதி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தது காண்போரின் கண்களில் கண்ணீரைச் சுரக்க வைத்தது.

 

Govt first honor to worker who donated  organs.

 

அன்றைய தினம் இரவு மாரியப்பனின் உடல் அவரது சொந்தக் கிராமத்தின் சுடுகாட்டில் அடக்கம் செய்கிறபோது, முதல் அரசு மரியாதையாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாலையணிவித்து இறுதியஞ்சலி செலுத்தினர். உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்த அவரது உறவினர்களுக்கு நன்றி தெரிவித்தோம். அவரது உடல் உறுப்புகள், திசுக்கள் நல்ல நிலைமையில் உள்ளன என்றார் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன்.

 

தான் இறந்த பின்பும் மற்றவர்களை உயிர் வாழச் செய்து தானும் உயிர் வாழ்கிற அந்த ஆன்மாவிற்கு தேசத்தின் எந்த மூலையிலும் தரப்படாத அரசு மரியாதையை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.