
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாபநாசம் வரை அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து தினமும் காலை, மாலை என 3 முறை ஆலங்குளத்தில் இருந்து இயங்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல் இந்த இன்று (05.06.2025) ஆலங்குளத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
அதன்படி இந்த பேருந்து இடைகால் அருகே உள்ள சுவர்பேக்கி என்ற பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தானது வயலில் இறங்கியது. இதன் காரணமாகப் பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் படி வழியாக வெளியே தவறி விழுந்துள்ளனர். இதில் 8 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அனந்தநடார்பட்டியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 42) என்பவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக காரில் சென்றவர்கள் ஜெயலட்சுமியை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜெயலட்சுமி உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். அரசு பேருந்து வயலில் இறங்கியதால் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தென்காசியில் சோகத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.