Skip to main content

வக்கீல்கள் தாக்குவதை வேடிக்கை பார்த்த போலீசார்! - தற்கொலை முயற்சிக்கு முன் ஓட்டுநர் கடிதம்!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018



சிவகங்கையில் வழக்கறிஞர்கள் தாக்கியதால் மனமுடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையின் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி வழக்கறிஞர் சங்கம் சார்பில், நேற்று காலை ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்து ஊர்வலமாக சென்று அரண்மனை வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
 

letter


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பரமக்குடி நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை இயக்க முயன்றார். இதனை தடுக்க சென்ற குரு தங்கப்பாண்டி என்கிற வழக்கறிஞர் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால், கோபம் கொண்ட சக வழக்கறிஞர்கள், அரசுப்பேருந்தின் ஓட்டுனர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அரசு பேருந்து ஓட்டுநர் சட்டை கிழிக்கப்பட்டது.



இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான அரசுப் பேருந்து ஓட்டுனர் செல்வராஜ், தாம் தாக்கப்பட்டதை எண்ணி மனவேதனையடைந்த அவர் பரமக்குடியில் உள்ள தமது வீட்டுக்கு அருகே நேற்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பூச்சி மருந்தைக் குடிப்பதற்கு முன்னதாக மரண வாக்குமூலம் எழுதி தனது சட்டைப் பையில் வைத்துள்ளார்.

இதனிடையே அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிவகங்கை நகர காவல்நிலைய போலீசார், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் குருதங்கப்பாண்டியன், மதி, ராஜாராம், செந்தில்குமார், வீரசிங்கம், வால்மீகநாதன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்