
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவதற்கான மற்றும் 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவதற்கான மசோதா அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு வந்திருந்த தொண்டர்களுக்கு இனிப்பு பொட்டலங்களையும் தமிழக முதல்வர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தை நாடி விடும் என்ற அச்சத்தில் ஆளுநர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.