governor tamilisai talks about tamilnadu culture spiritual culture

வேலூர் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31 ஆம் ஆண்டு விழா இன்று (08.05.2023) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க 10008 மஞ்சள் குட நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும்,புதுச்சேரி துணைநிலைஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

Advertisment

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. இந்த இரண்டும் தான் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் சிலர் ஆன்மீகத்தை தவிர்த்து தமிழ் தான் அனைத்திற்கும் என்று சமீப காலமாக கூறி வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல. கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு அந்த அளவிற்கு நாங்கள் முயற்சி செய்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம்கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு நமது ஆன்மீகமும் அறிவியலும் காரணமாகும்.

Advertisment

இந்தியா எடுத்த உறுதியான முடிவினால் 45 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். இதற்கு தடுப்பூசியும் இறைவனின் அருளும்தான் காரணமாகும். இவை இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை காண முடியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன். ஆன்மீகமும் தமிழும் ஒன்றுதான்.ஆன்மீகத்தோடு கூடிய தமிழ் தான் தமிழகத்திற்கு வளர்ச்சியை தரும். தமிழக கலாச்சாரம் ஒரு ஆன்மீக கலாச்சாரம். தமிழக முதல்வர் இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் நான் பாகுபாடு பார்ப்பவன் இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால் இவர் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்து நான் கேட்டிருந்தேன். இதுவரையில் எனக்கு பதில் இல்லை.

ஆளுநர்கள் குறித்து தவறான கருத்துகளை கூறுகிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அதிகாரங்கள் உள்ளது. அதே போல் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் சில அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளது. ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஏன் ஆளுநரை சந்தித்தார்கள். எல்லோரையும் மரியாதையுடன் பேச வேண்டும். ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கூறி வருகிறார். அதே போல் நான் புதுவையில் அதிக நாள் தங்கியிருப்பதாக நாராயணசாமி கூறுகிறார்.

உண்டியல் குலுக்கி புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். அவர் உண்டியல் குலுக்க தேவையில்லை சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே அவர் ஏற்பாடு செய்யலாம். பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மக்களும் ஹைதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். உங்களைப் போல நாங்கள் தனி விமானத்தில் செல்லவில்லை. மக்களோடு மக்களாகத்தான் நாங்கள் செல்கிறோம்.ஏற்கனவே புதுவைக்கும் ஹைதராபாத்திற்கும் நேரடி விமான சேவை உள்ளது. இது கூட தெரியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகிறார். புதுவையில் முதலமைச்சராக நாராயணசாமி இருந்தபோது அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே நாராயணசாமி ராஜ்யசபா எம்பி ஆக இருந்தார் என்பதும் எங்களுக்கு தெரியும். அதனால் எல்லோரையும் குறை சொல்ல வேண்டாம்" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.