தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று (17-01-24) திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதனை தொடர்ந்து, ரங்கநாதர் சன்னதி மற்றும் தாயார் சன்னதிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் நீர் கொண்டு சுத்தம் செய்தார்.
அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாகுவதற்கு முன்பே அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே கிராமத்தின் வளர்ச்சி இருக்கும். காலணியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் ராம நாமமே ஒலித்து வருகிறது. கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு பக்தர்களுக்கும் பெரும் பங்குண்டு. அந்த வகையான தூய்மை பணிகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்” என்று கூறினார்.