“ஆளுநருக்கு திருக்குறளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது..” - வைகோ

“The governor has no deep knowledge of Thirukkural ..” - Vaiko

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநருக்கு திருக்குறளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது. இந்துத்துவா கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங்கபரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றனர். அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என் ரவியும் பேசுகிறார்.

திருக்குறளை பற்றி ஆல்பார்ட் ஸ்விட்சர்ரை விட ஆராய்ச்சி செய்துவிட முடியாது. அவரே கூறியுள்ளார் உலகில் இப்படி ஒரு பொதுவான நூல் இல்லை என்று. நோபல் பரிசு பெற்ற அவரே திருக்குறள் குறித்து கூறியிருக்கிறார். ஜி.யூ போப்பும் திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர். அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் துரதிஷ்டமான செயலாகும். தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ள 14 சட்ட மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சி செய்கிறார்” என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அவர்கள் மனம் போன போக்கில் எல்லாம் பேசுகிறார்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என்று பதிலளித்தார்.

mdmk vaiko
இதையும் படியுங்கள்
Subscribe