சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 83 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Governor

உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணைவேந்தருமான அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது "அறிஞர் அண்ணா, டாக்டர் எம்ஜிஆர் ஆகியோர் உரையாற்றிய இடம் இது. இங்கு வாழ்த்துரை வழங்குவது பெருமையாக உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியதில் இருந்து பல்கலைகழகத்திற்கு தேவையான நிதியை அவர் வழிவந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

Advertisment

இங்குள்ள ஊழியர்களின் நலன் கருதி 40 சதவீதத்திற்கு மேல் ஊழியர்களை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சத்திய நாராயண மூர்த்தி, பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் 56,723 மாணவர்களுக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார். இதில் 432 பேருக்கு முனைவர் பட்டங்களையும், 232 மாணவர்களுக்கு இளம் முனைவர் பட்டங்களையும், 37 பேருக்கும் தங்கப்பதக்கங்களையும் ஆளுநர் வழங்கினார்.