உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கானப் பயணச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (25/02/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ரஷ்ய ராணுவம் 24/02/2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழகத்தைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்ற சூழ்நிலையை அறிந்து, அவர்களை மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு, மாவட்ட, மாநில அளவில் மற்றும் புதுதில்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இன்று (25/02/2022) காலை 10.00 மணி வரை தமிழகத்தைச் சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழக அரசைத் தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.