Skip to main content

மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது : அன்புமணி வலியுறுத்தல்

Published on 08/07/2018 | Edited on 08/07/2018
pump

 

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:


’’தமிழ்நாட்டில் விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதும், வீடுகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுவதும் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்க  காரணம் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேளாண் பயன்பாட்டுக்காக வழங்கப் படும் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பதற்கான மறைமுக அறிவுரை தான் இதுவாகும்.

 

மாநில மின்சார வாரியங்களின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ‘பி’ தரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாடு மின்வாரியம் இந்த தரத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 41 மின்சார வாரியங்களில் 20 நிறுவனங்கள் தமிழகத்தை விட உயர்ந்த தரத்தைப் பெற்றுள்ளன. 11 நிறுவனங்கள் தமிழகத்துக்கு இணையான தரத்தையும், 10 நிறுவனங்கள் தமிழகத்தை விட குறைந்த தரத்தையும் பெற்றுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அளவுக்கு பின்னடைவை சந்தித்து வருவதற்கு இலவச மற்றும் மானிய மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவது, மின்துறை சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படாதது ஆகியவை தான் காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 

அதுமட்டுமின்றி, வணிக அடிப்படையிலான மின்சார இழப்பை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மின்துறை சீர்திருத்தங்கள் என்று கூறினாலே, அது விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான். இப்போது மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளின் நோக்கம் என்னவென்றால்,  விவசாயப் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு மதிப்புள்ள மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிவது,  அதன்பின்னர் இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, ஒரு கட்டத்திற்கு பிறகு இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான். கடந்த காலங்களில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய இத்தகைய முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வெளிப்படையாகவே அறிவித்தார். கடுமையான போராட்டங்களின் மூலம் இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் புதிய முயற்சியை அரசு தொடங்கியுள்ளது.

 

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதை விட இந்த முறை மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், கடந்த காலங்களில்  இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போது, தமிழகத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் எதிர்ப்புக்கு பணிந்து, அவற்றை அப்போது தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நிராகரித்தன. ஆனால், இன்றைய பினாமி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய ஆட்சியாளர்கள் எதை சொன்னாலும் அதை செய்து முடிக்கும் தன்மை கொண்டது என்பதால் தான் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விடுமோ? என்ற அச்சம் எழுகிறது. இந்த அச்சம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 

 

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதாக கூறுவதே அபத்தம் ஆகும். இலவச மின்சாரம் வழங்குதல், மானிய விலையில் மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றால் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தமிழக அரசு மானியம் வழங்குகிறது. நடப்பாண்டில் மட்டும் இதற்கான மானியமாக ரூ.7540 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. இதற்குப் பிறகும் மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதற்கு காரணம் அதன் நிர்வாகத்தில் நிறைந்துள்ள ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான். அதை சரி செய்தாலே தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயங்க வைக்கலாம். அதை விடுத்து இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது.

 

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்த போது, மின்வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் மட்டும் ஆண்டுக்கு ரூ.3000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது. தேசிய சந்தையில் மின்சாரம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ள போதிலும், அதை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல் மட்டும் குறையவில்லை. மின்னுற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்வதிலும் பெருமளவில் ஊழல் நடக்கிறது. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வதால் உற்பத்திச் செலவு பெருகுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் மின்சார வாரியத்திற்கு இழப்பு அதிகரிக்கிறது.

 

அதுமட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் உழவர்கள் வறுமையிலும், கடன் சுமையிலும் சிக்கிக்  கொண்டிருக்கும் நிலையில், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயமே அழிந்து விடும்; உழவர்கள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இவை மோசமான தொடர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதோ, மின்கட்டணத்தை உயர்த்துவதோ கூடாது என வலியுறுத்துகிறேன்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள்; கொடுக்கத் தயாராக உள்ளார்கள்” - அன்புமணி

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

“Borrow anywhere; They are ready to give” - Anbumani

 

எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தின் முதன்மை பிரச்சனை ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர்த் திட்டம். அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு காரணங்கள் வேண்டாம். தென்பெண்ணையில் ஆண்டுக்கு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளது. உபரி நீர் கடலில் கலக்கிறது. அதை இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும். இதுதான் நீர் மேலாண்மை. அடுத்த 5 ஆண்டுகளில் முதல்வர் 1 லட்சம் கோடியை நீர்மேலாண்மைக்குச் செலவிட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் இதுபோன்ற நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்

 

மேலும் பேசிய அவர், “2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு எங்கள் அறிவிப்பு வரும். பார் நடத்துவது அரசாங்க வேலை கிடையாது. அது சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அதை மேல்முறையீடு செய்து ஸ்டே வாங்கியுள்ளனர். எந்த சட்டத்தில் பார் நடத்தலாம் என்ற அதிகாரம் உள்ளது” எனக் கூறினார்.