Skip to main content

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இணையதள முகவரியை மாற்றிய தமிழக அரசு!

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education Act - 2009) கீழ் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இணையதளத்தில் விண்ணப்பித்து வந்த நிலையில் , தற்போது புதிய இணையதள முகவரியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான இணையதள முகவரி : http://rte.tnschools.gov.in/tamil-nadu ஆகும்.  இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான வழிமுறைகள் தமிழில் குறிப்பிட்டுள்ளனர். 

 

rte



விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் .
2. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
3. பெற்றோர் அல்லது குழந்தையின் காப்பாளரின் இருப்பிட சான்றிதழ் (குடும்ப அட்டை , ஆதார் அட்டை).
4. வருமான சான்றிதழ்.
5. சாதி சான்றிதழ்.

 

rte



தமிழக பள்ளிக்கல்வி துறை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இணைய தள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

 

rte



மேலும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் யார்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் இந்த சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை சுயநிதி பள்ளிகள் தவிர மற்றும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் ஏதாவது ஒன்றில் சேர்க்கலாம். இதற்கான விண்ணப்பம் தொடங்கிய நாள் : 22/04/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 18/05/2019.  அதே போல் எங்கு போய் விண்ணப்பிப்பது ? தமிழக அரசு இ சேவை மையங்கள் , மாவட்ட கல்வி அலுவலகங்கள் ,தனியார் இண்டர்நெட் சென்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப கட்டணங்களை அரசுக்கு எதுவும் செலுத்த தேவையில்லை. அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சுமார் 25% இட ஒதுக்கீட்டை கட்டாயம் அளிக்க வேண்டும். மேலும் இந்த சட்டத்தின் கீழ் சேரும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை சமந்தப்பட்ட பள்ளிகள் வசூலித்தால் தமிழக பள்ளிக்கல்வி துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். அதே போல் (LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை ) கல்வி கட்டணம் முற்றிலும் இலவசமாகும். இதற்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.