Skip to main content

“பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்..” - திருமாவளவன் 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

"Government of Tamil Nadu should come forward to rehabilitate Perarivalan .." - Thirumavalavan

 

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம். இது மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல; மாநில உரிமைக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும். 

 

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிய அன்றைய அதிமுக அரசையும்; ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து பேரறிவாளனின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு அதை சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த இன்றைய திமுக அரசையும் குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினையும் மனமாரப் பாராட்டுகிறோம்.

 

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளனுக்கும், அவரது விடுதலைக்காக இடைவிடாமல் போராடிய 'அறம் காத்த அன்னை' அற்புதம் அம்மாள் அவர்களுக்கும் எமது வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.

 

பேரறிவாளன் இப்போது விடுதலை ஆகியிருக்கும் நிலையில், அதே வழக்கில் அதே கால அளவில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட மற்ற ஆறு பேருக்கும் அதே சட்ட வரையறைகளின்படி விரைவில் விடுதலை கிடைத்திட வழி பிறக்குமென நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறோம். 

 
இந்த வழக்கின் விசாரணையின்போது அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தணடனைக் குறைப்பு அதிகாரம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த பல கருத்துகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு எடுக்கும் முடிவை கிடப்பில் போட்டு வைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினை அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாக இது அமைந்துள்ளது. 


இந்நிலையில், அவற்றைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இதுவரை இயற்றியுள்ள சட்டங்களுக்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.


19 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் இப்போது 50 வயதைக் கடந்தவராக விடுதலை ஆகியிருக்கிறார். அவர் இழந்த இளமையை, வாழ்க்கையை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. எனினும் எஞ்சியுள்ள வாழ்நாளை அவர் அமைதியாக கழிக்கும் வகையில் அவருக்கு மீள்வாழ்வளிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு கருணைகூர்ந்திட வேண்டும் என்று விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.

Next Story

“மோடி கும்பல் போன்ற சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan says country should be saved from exploiters like Modi gang

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, கடலூர் தொகுதி எம்எல்ஏ ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், கடலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் எம்.பி, எம்எல்ஏக்கள் ஐயப்பன், சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

இந்தக் கூட்டத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பேசியதாவது, “தேர்தல் நேரமாக இருப்பதால் அனைவரும் ஓட்டு மட்டுமே கேட்க வேண்டும். அரியலூர் மாவட்டத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் இடையே அமைச்சர்களுக்குள் யார் எவ்வளவு வாக்குகள் வாங்குவது என்பது குறித்து சவால்கள் எழுந்துள்ளன. இந்த தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். மக்களின் மொழியில் பேசி நிர்வாகிகளை உழைக்க செய்பவர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். அரியலூரில் கடந்த தேர்தலின்போது பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி வாக்கு சேகரித்தவர் அமைச்சர் சிவசங்கர். திமுகவினர் எப்படி செயல் திட்டங்களை வகுக்கிறார்களோ, அதனை முன்னெடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வாக்கு சேகரிக்க வேண்டும்.

Thirumavalavan says country should be saved from exploiters like Modi gang

இந்த கூட்டணி சமூகநீதி அடிப்படையிலான கூட்டணி. அமைதி, சமூக நல்லிணக்கம் தான் முதன்மையானது. இதை நான் தேர்தலுக்காக சொல்லவில்லை. இந்த தொகுதியில் தொழில், வியாபாரம், சமூக அமைதி போன்றவை இதுவரை பாதிக்கப்பட்டதா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாஜக சமூகநீதிக்கு எதிரான கட்சி. சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு போன்ற எந்த திட்டங்களுக்கும் திருமாவளவன் எதிராக நின்றதில்லை. மண்டல் பரிந்துரையை அறிவித்தவுடன் அதை ஏற்று அதை ஆதரித்து மதுரையில் பேரணி நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

மண்டல் கமிஷனை கொண்டு வந்த வி.பி. சிங்குக்கு சென்னையிலே ஸ்டாலின் சிலை அமைத்தார். அதற்கு காரணமாக இருந்ததில் இந்த திருமாவளவனும் ஒருவன். ஆனால் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதற்காக வி.பி. சிங் அரசை கவிழ்த்தவர் பாஜகவின் அத்வானி. சமூக நீதிக்கு எதிரான கும்பலோடு திருமாவளவன் கைகோர்க்க மாட்டான். பாஜகவோடு பாமக சேர்ந்துள்ளது. சமூகநீதிக்கு எதிரான கட்சியோடு பாமக கூட்டணி சேர்ந்து இருக்கிறது.

தன்னுடன் கூட்டணி சேரும் கட்சிகள் நீர்த்துப் போகச் செய்யும் கட்சி பாஜக. ராம்விலாஸ் பஸ்வான் கட்சி, சிவசேனா போன்ற கட்சிகள் அதற்கு உதாரணம். ஓபிசி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையில் உள்ள கிரிமிலேயரை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கூறி பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் மனு கொடுத்தவன் நான். மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் ஓபிசி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என போராடியதும், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் விசிக இணைந்து கொண்டது. அதன் காரணமாகவே இன்று 12 ஆயிரம் ஓபிசி மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. பாஜகவுக்கு எந்த வாக்கு வங்கியும் இல்லை. பாஜக வாங்கும் வாக்குகள் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகள் ஆகும். அவர்களை வளர்க்க பாமக அவர்களோடு கூட்டணி சேர்ந்துள்ளது. இங்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு ஒரு சங்கடம் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் விஷ்ணுபிரசாத்தை அவர் வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது அக்கா செளமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த மாவட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொறுப்பு வகிப்பதால், அங்கு விஷ்ணுபிரசாத் அக்கா சௌமியா அன்புமணியை தோற்கடிக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்து கொண்டிருப்பது ராகுல்காந்தி மட்டுமே. பெரும் கும்பலிடம் இருந்து, மோடி கும்பல் போன்ற சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்” எனப் பேசினார். இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.