Skip to main content

ஜெயலலிதா நினைவு இல்லம் கட்டடத்திற்குள் செல்ல அனுமதிக்காத உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டுக்கு ஒப்புதல்!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Government of Tamil Nadu approves appeal against order not to allow Jayalalithaa to enter memorial building

 

நினைவில்லமாக மாற்றப்பட்ட, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, வேதா நிலைய கட்டடத்திற்குள் செல்ல அனுமதிக்காத தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை 29ஆம் தேதி விசாரிப்பதாக,  தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

 

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கி, அதை நினைவில்லமாக மாற்றியுள்ளது. நேற்று (28.01.2021) அதன் திறப்புவிழா நடைபெற்றது.

 

இந்நிலையில்,  வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு 69 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி என்.சேஷசாயி விசாரித்து, இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.  

 

அதில், நினைவில்லம் திறப்பு விழாவை நடத்த அனுமதி அளித்து, இதற்காக அப்பகுதியில் பேனர்கள் வைக்கக்கூடாது என உத்தரவும் பிறப்பித்திருந்தார். அதேசமயம், வேதா நிலைய வளாகத்தின் நுழைவுவாயிலைத் திறந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்றாலும், வேதா நிலைய பிரதான  கட்டடத்தை திறக்கக் கூடாது, ஜெயலலிதாவின் உடைமைகள் முறையாக கணக்கெடுக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது, நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாவியை தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

 

வேதா நிலைய பிரதான கட்டடத்தில் அனுமதிக்காதது உள்ளிட்ட இரண்டாம் பகுதி உத்தரவுகளை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கடந்த 27-ஆம் தேதி இரவே, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் காணொளி மூலமாக ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.

 

அதை விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும், அதேசமயம் மேல்முறையீடு வழக்கை வெள்ளிக்கிழமை (ஜனவரி 29ல்) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும்  ஒப்புதல் அளித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.