Government of Tamil Nadu announces Thiruvalluvar and Kamarasar awards!

2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது பெங்களூரில் வாழ்ந்துவரும் மு.மீனாட்சி சுந்தரத்திற்கும், 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கும் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; “தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டு புரிந்துவருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் தலைமையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவரும் பெங்களூர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பெங்களூரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மு. மீனாட்சி சுந்தரத்திற்கு (வயது 78) தமிழ்நாடு அரசு, 2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

Advertisment

Government of Tamil Nadu announces Thiruvalluvar and Kamarasar awards!

அதே போன்று. பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளை கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும், சிறந்த நூல்களைப் படைத்தவரும், பன்முகத் திறன் கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு (வயது 88) தமிழ்நாடு அரசு, 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.