சென்னை ராஜா அண்ணாமலை புரம், கோவிந்தசாமி நகர் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வாழவாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் போர்வை, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது. மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமியின் நினைவாக நடந்த இந்நிகழ்வுக்கு பே.பெலிக்ஸ் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அதில் பேசிய நல்லகண்ணு அவர்கள், “இந்நாடு மனிதநேயம் அற்ற நாடாக இருக்கிறது. என்னாட்டில் என் மக்கள் அகதிகள் போல் வாழ்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு கொடுத்த இடத்தையே அரசே ஆக்கிரமிப்பு என கூறி இந்த மக்கள் வாழந்துவந்த வீடுகளை இடித்து அவர்கள் தற்போது மற்றவர்களின் மத்தியில் கையேந்தும் வகையில் இருக்கிறார்கள்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்த மக்களின் வீடுகளை அகற்றி பெரும்பாக்கத்தில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு அடிப்படை வசதி மற்றும் வாழ்வாதரத்திற்கான எந்த வேலைவாய்ப்பும் இல்லை என்ற பட்சத்தில் அனைவரும் சென்னை நோக்கியே வருகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே சென்னை பூர்வகுடி மக்களை சென்னை விட்டு விரட்டும் தொனியை கைவிட்டு, உடனடியாக இவர்களை சென்னையில் இருந்து அப்புறப்படுத்தாமல் இருக்க மாநில அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கவேண்டும். அவர்களுக்கு சென்னையின் உள்ளே அவர்களின் இடங்களிலே வீடுகளை கட்டித்தர வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் நாளையில் இருந்து சந்தித்து இதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வகை செய்வோம்” என்றார்.