Skip to main content

“உயிரிழப்புகளை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” - ராஜேஸ்வரிபிரியா வேண்டுகோள்

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

"Government should take immediate action to prevent loss of life" - Rajeswaripriya

 

தாம்பரம் பெருங்களத்தூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதேபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 

 

இது தொடர்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ. ராஜேஸ்வரிபிரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில மாதங்களாக நள்ளிரவு நேர விபத்துகள் அதிகமாக நடந்து வருவது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய நிகழ்வுகள் ஆகும். விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது அதிவேகப் பயணம். அளவுக்கதிகமான வேகத்திற்கு காரணம் போதை என்பது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மை. 

 

மது தவிர இதர போதை பொருட்களும் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. வாகனம் ஓட்டும்போது சோதனையில் ஈடுபடும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாதபடியான போதைப் பொருட்கள் ஏராளம். மது, போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும். 

 

இரு வாகனங்கள் மோதி கொள்வதைவிட தற்போது  தனி வாகனமாக வேகமாக சென்று, நின்றுகொண்டிருக்கும் வாகனங்களில் மோதுவதும் சாலை வகுப்பானில் (divider) மோதுவதும் அதிகரித்து வருகிறது. கேமராக்களும், வேக கட்டுப்பாட்டு கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால், வேகமாக செல்லும் வாகனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 

 

வாகன ஓட்டுநர் உரிமத்தினை ரத்து செய்யும் அளவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலை நாடுகளில் ஓட்டுநர் உரிமத்திற்கு புள்ளிகள் (Points) வழங்கப்பட்டு ஒவ்வொரு குற்றத்திற்கும் புள்ளிகள் குறைக்கப்படும். அதேபோல் தமிழகத்திலும் தண்டனை வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உயிர் இழப்புகளை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்