கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம், சுகாதாரத்துறையின் மூலம் போர்க்கால நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்வதற்காக 500 டாக்டர்களையும் 2,500 மருத்துவப் பணியாளர்களையும் புதிதாக தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.
மருத்துவப் பணியாளர்களில் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் ( லேப் டெக்னிசியன்ஸ் ) மற்றும் செவிலியர்கள் நியமனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தோடு கலந்தாலோசித்து பெரிய மருத்துவமனைகளில் 750 படுக்கை வசதிகள் கொண்ட தனிவார்டுகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய தீவிர சிகிச்சை வசதிகளை உருவாக்குவதற்காக 560 வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள் உள்ளிட்ட அதிஉயர் மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துமனைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படி அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மருத்துவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.