Skip to main content

கல்லூரி அருகில் பதுக்கிவைத்திருந்த 150 கிலோ குட்கா பறிமுதல்!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

150 kg of gutka seized from college

 

தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், பல இடங்களில் அவை விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அதற்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் அருகில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதையடுத்து, கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை செய்து மறைத்துவைத்து விற்கப்பட்ட போதை பொருட்களைப் பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துவருகின்றனர்.

 

150 kg of government ban item  seized near college

 

இந்நிலையில், குமரி மாவட்டம், அழகியமண்டபம் அருகில் உள்ள தனியார் கலைக்கல்லூரி அருகில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருளைப் பதுக்கிவைத்திருப்பதாக தக்கலை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, நேற்று (26.11.2021) மாலை இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை செய்ததில், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 150 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளர் முகம்மது சாலியை கைது செய்தனர்.

 

மேலும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குட்காவை வீட்டில் பதுக்கிவைத்து, அவர் நடத்திவரும் கடையில் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து, முகம்மது சாலி மீது வழக்குப் பதிவுசெய்து அவரை சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.