
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் கடந்த செப். 24ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது. அப்போது தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் அவர் கடையில் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு அப்போது ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்பிறகு அவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வந்ததையடுத்து அக். 22ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்கு அக். 23 ஆம் தேதி அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகச் சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர், ஏற்கனவே அவசர தடையாணை வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக கடைக்கு இன்று சீல் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அக்கடைக்குச் சீல் வைக்கப்பட்டது.