government schools students chennai high court

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்,‘எங்களது கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2400 அரசு உதவிபெறும் தமிழ்வழிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. எங்களுடைய பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், போதிக்கும் முறை, உதவிகள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது பாரபட்சமானது. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் படிக்கின்றனர். எனவே, அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும்.’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், உயர் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 5- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.