Skip to main content

கழிவறை இல்லாமல் தவித்த மாணவிகள்; தாயாக மாறிய அரசு பள்ளி ஆசிரியை

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

 government school teacher built toilets for the students at her own expense

 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஐங்குணம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 

மாணவர்களுக்கான கழிவறையையே மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர். பள்ளி இல்லாத நாட்களில் அந்த கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் போதையில் அங்குச் சென்று அசிங்கம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதோடு, சில நேரங்களில் கழிவறையில் உள்ள பொருட்களை உடைத்துவிட்டு சென்றிருந்தனர். இதனால் அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

 

 government school teacher built toilets for the students at her own expense

 

இந்நிலையில், கடும் சிரமத்திற்கு உள்ளாகும் மாணவிகளின் நிலையைக் கண்டு, அந்தப் பள்ளியின் இடைநிலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் ஆனிரீட்டா என்கிற ஆசிரியரே தனது சொந்தப் பணத்தில் ரூபாய் 6.5 லட்சம் செலவு செய்து மாணவிகள் பயன்படுத்த 8 கழிவறைகள், ஆசிரியர்கள் பயன்படுத்த 2 கழிவறைகள் என 10 பாதுகாப்பான கழிவறைகளைக் கட்டித் தந்துள்ளார். இவ்வளவு தொகையை தனது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் சேமநலநிதியில், சேமிப்பாக இருந்த தொகையை, அரசிடமிருந்து வாங்கி இந்த கழிவறைகளை கட்டித் தந்துள்ளார். முழு நேரமும் தண்ணீர் வசதியும் இதன் மூலம் செய்து தந்துள்ளார்.

 

எங்கள் பள்ளிக்கு சுற்றிலும் உள்ள 15 அரசு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் கல்வித்துறை பயிற்சிக்காக அடிக்கடி வருவார்கள். ஆனால் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பள்ளியில் கழிப்பறை வசதிகளே கிடையாது. அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் உள்ள கழிவறைகளை பயன்படுத்துவார்கள். எங்களுடைய பள்ளியில் 270 மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களும் இப்படித்தான் இயற்கை உபாதைகளுக்கு போக முடியாமல் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே கழிவறை கட்டித் தர வேண்டும் என முடிவு செய்து எங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இதனை கட்டித் தந்துள்ளேன் என்கிறார் ஆனிரீட்டா.

 

 government school teacher built toilets for the students at her own expense

 

ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ மாணவிகளை தங்களது பிள்ளைகளாகவே பார்க்க வேண்டும் என்பார்கள். அப்படி பார்க்கும் ஆசிரியர்கள் வெகு குறைவு. மாணவ மாணவிகளை தங்கள் பிள்ளைகளாக பார்க்கும் ஆசிரியர்கள் அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. மாணவிகள் துன்புறுவதை பார்த்து கழிவறை கட்டித் தந்து ஆசிரியர் என்கிற இடத்திலிருந்து மாணவிகளின் தாயாக உயர்ந்துள்ளார் ஆனிரீட்டா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Private school's introduced AI teacher in kerala

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. 

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.