Advertisment

மாணவிகளிடம் ஆபாசப்படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

Government school teacher arrested under pocso

Advertisment

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜியாவுல்ஹக். இவர், தன்னுடைய பள்ளியில் படித்து வரும் மாணவிகளை தனியாக அழைத்து, அலைபேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்து, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் பலர், பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்கள் விசாரித்தபோதுதான், ஆசிரியர் ஜியாவுல்ஹக்கின் தகிடுதத்தங்கள் வெளியே தெரியவந்தன.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுபற்றி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர் தனம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னுடைய லீலைகள் காவல்துறை வரை சென்றதை அறிந்த ஆசிரியர் ஜியாவுல்ஹக், திடீரென்று தலைமறைவானார். முதல்கட்ட விசாரணையில் ஜியாவுல்ஹக் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், பிப். 17ம் தேதி ஆசிரியர் ஜியாவுல்ஹக்கை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவரை மத்திய சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், மேச்சேரி சுற்று வட்டாரத்திலும், தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe