![Government school teacher arrested for misbehaving with students](http://image.nakkheeran.in/cdn/farfuture/A6X9nGgM6ABYC1WlkmE0JCy_nlk4OuyX6xDF6grYIGQ/1698494813/sites/default/files/inline-images/993_211.jpg)
அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சிப்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆண்டுகளாக ராமமூர்த்தி என்பவர் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆசிரியர் ராமமூர்த்தி பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்க, அவர்களின் பெற்றோர்கள் ஒன்றாகத் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனிடையே சக ஆசிரியர்கள், ராமமூர்த்தியை பள்ளியில் ஒரு அறையில் பாதுகாப்பாகப் பூட்டி வைத்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்ததோடு ராமமூர்த்தியை வைத்துப் பாதுகாத்து வந்த அறையையும் உடைக்க முற்பட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்தியை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.