Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அடுத்தடுத்து அம்பலமாகும் சதி - அரசு விலக வேண்டும்! இராமதாஸ் வலியுறுத்தல்

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிரைப் பறித்த காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டது யார் என்பது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு எதிர்பாராத தூண்டல் காரணமல்ல... அரசும் காவல்துறையும் தீட்டிய சதி தான் காரணம் என்பது இந்த உண்மைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

 

pmk


 

தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புற்றுநோய் உற்பத்தி மையமாக விளங்கிய ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள் மீது  கடந்த 22&ஆம் தேதியும், 23&ஆம் தேதியும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டது யார்? என்ற வினாவுக்கு இன்று வரை தெளிவான விடை கிடைக்கவில்லை. இந்த வினாவுக்கு பதிலளிக்க தமிழக அரசும், முதலமைச்சரும் மறுத்து வந்த நிலையில், துணை வட்டாட்சியர்கள் ஆணையிட்டதன் அடிப்படையில் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைமை இயக்குனர், முதலமைச்சர் ஆகியோரைத் தாண்டி துணை வட்டாட்சியர் தான் அதிகாரம் படித்தவர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் மீது பழியை சுமத்தி தப்பிக்க நினைப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல... மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
 

ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இந்த நாடகமும் அம்பலமாகிவிட்டது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம் ஆகிய இரு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகளில் தான் 12 பேர் கொல்லப்பட்டனர். எஃப்.சி.ஐ ரவுண்டானா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டால், அதை சமாளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அதிகாரிகளாக துணை வட்டாட்சியர் நிலையிலுள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி திரேஸ்புரம் பகுதிக்கு சேகர் என்ற தேர்தல் துணை ஆட்சியரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு ராஜ்குமார் தங்கசீலன் என்ற தனி வட்டாட்சியரும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடும் அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக அரசு கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட இவர்கள் தான் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு பதிலாக வேறு இடத்தில் இருந்த அதிகாரிகளிடமிருந்து ஆணை பெறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 



அதிகம் பேரை பலிவாங்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு பொறுப்பான சேகர் என்ற தேர்தல் துணை வட்டாட்சியர் ஆணையிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், திரேஸ்புரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு  அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் இருந்த கண்ணன் என்ற துணை ஆட்சியர் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிடும் அதிகாரிகள் அப்பகுதியில் நிலவும் சூழலை ஆய்வு செய்து தான் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட வேண்டும். அதற்காகத் தான் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பொறுப்பு அதிகாரியிடம்  அனுமதி பெறாமல் எங்கோ உள்ள ஓர் அதிகாரியிடம் ஆணை பெற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுவது  இமாலயப் பொய் ஆகும். இது மக்களையும், நீதித்துறையையும் முட்டாள்களாக்கும் முயற்சி ஆகும்.
 

அதேபோல், எப்.சி.ஐ. ரவுண்டானா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த, அப்பகுதியின் பொறுப்பு அதிகாரியான வட்டார வழங்கல் அலுவலர் கோபால் ஆணையிட்டதாக சில நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதியில் எந்த கலவரமும் நடக்கவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்த தாம் ஆணையிடவில்லை என்று அந்த அதிகாரி மறுத்துவிட்டார். துப்பாக்கிச் சூடு சதி அம்பலமானதால், எப்.சி.ஐ. ரவுண்டானா பகுதியில் பொறுப்பு அதிகாரியை தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் தாமே துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக காவல் ஆய்வாளர் மீனாட்சி நாதன் என்பவர்  கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது அபத்தத்திலும் அபத்தமாகும்.
 

தூத்துக்குடியில் எந்த இடத்திலுமே துப்பாக்கிச்சூடு நடத்த வட்டாட்சியர்கள் ஆணையிடவில்லை என்று  தெரிகிறது. ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் நிலையில் தீட்டப்பட்ட சதித் திட்டத்தின்படி காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, துணை வட்டாட்சியர்கள் ஆணைப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. திரேஸ்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளின் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த துணை வட்டாட்சியர்கள் இந்த சதித் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால், இந்த சதி நாடகத்தில்  அவர்களுக்கு பதிலாக வேறு இரு துணை வட்டாட்சியர்கள் புதிய கதாபாத்திரங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
 

எந்த வகையில் பார்த்தாலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயல்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.