Skip to main content

முடங்கிய பொதுப் போக்குவரத்து; பொதுமக்கள் கடும் அவதி! 

Published on 26/02/2021 | Edited on 27/02/2021

 

Government public transport freeze, public suffering


தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் 80 சதவிகித அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வைத் தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்கள் உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

 

இது சம்பந்தமாகத் தொழிற்சங்கத்தினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால், கடந்த 25ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன. அதன்படி 25ஆம் தேதி காலை 6 மணி முதல் போராட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திரண்டு சென்று பணிமனைகள் முன்பு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துக்கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொது மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
 

நேற்று 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாசிமகத் திருவிழா சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து சிவனை வழிபட்டு வருவார்கள். ஆனால், பஸ் போக்குவரத்து இல்லாததால் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். மேலும் பஸ் கூரைகளின் மீது ஏறி நின்றபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்து இயங்காததால், ஒவ்வொரு போக்குவரத்துப் பணிமனைகளிலும் அரசுப் பேருந்துகள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஷேர் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.