Skip to main content

அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை... விவசாயிகள் வேதனை!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் வழக்கமாக திறக்கப்படும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலான நிலையங்கள், திறக்கப்படாமல் இருப்பதுதான் விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது. இதற்காக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 Government Paddy Purchasing Centers Not Opened cauvery delta farmers

இது குறித்து போராட்டத்தில் இருந்த விவசாயிகளிடம் விசாரித்தோம், "பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழாவிற்கு முன்பே அறுவடை செய்ய வேண்டிய கதிர்கள் அனைத்தும் போதிய அறுவடை இயந்திரங்கள் இல்லாமல் போனதால் படுத்துவிட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்பு லேசாக பெய்த மழையில் பயிர்கள் முளைத்துவிட்டது. இக்கட்டான சூழ்நிலையில் நெல் மணிகள் சாய்ந்துவிட்டதால் வயலில் கொட்டி பாதி அளவுதான் தேறுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள நெல் அறுவடை இயந்திரங்களை அதிகக்கூலி கொடுத்து அறுவடை செய்த நிலையில் நெல்லை விற்பதற்கு போதிய கொள்முதல்நிலையம் திறக்காமல் தவிக்கவிட்டுவிட்டனர். 

 Government Paddy Purchasing Centers Not Opened cauvery delta farmers

கும்பகோணம், நாச்சியார்கோவில், திருப்பந்துறை, வண்டுவாஞ்செரி, திருமங்கைச்சேரி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துக்கொண்டு பனியிலும், வெயிலிலும் இரவு பகலாக பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கேயே சாப்பிட்டுவிட்டு உறங்கும் நிலைமையாகிவிட்டது.

 Government Paddy Purchasing Centers Not Opened cauvery delta farmers

நெல் தூற்றும் மிஷின்களை மட்டும் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் இறங்கியுள்ளனர். ஆனால் கொள்முதல் அலுவலர்கள் இன்னும் நியமிக்காமல் உள்ளதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க முடியாமல் மிகுந்த சிரமத்தில் தவிக்கிறோம்," என்கிறார்கள். 
 

ஏன் கொள்முதல் நிலையங்கள் திறக்க தாமதம் என அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உண்டான பணத்தை உடனே கையில் கொடுத்து விடுவார்கள். அதில் கொள்முதல் நிலைய அதிகாரிக்கான கமிஷனை பிடித்துக்கொண்டு விவசாயிகளிடம் கொடுப்பார்கள். ஆனால் தற்போது விவசாயிகளிடம் சிட்டா அடங்கல் வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு வங்கியின் மூலம் வரவு வைத்து வருகின்றனர்.

 Government Paddy Purchasing Centers Not Opened cauvery delta farmers

இதனால் அதிகாரிகளுக்கு கிடைக்கும் வருவாயில் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு விட்டது. நெல் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகளிடம் கமிஷனைக்கேட்டால் வந்ததும் தருகிறேன் என்கின்றனர்,  அதனால் கொள்முதல் செய்யப்படும் அதிகாரிகளுக்கு வருவாய் இல்லாமல் போனது ஒருபுறம் அதில் இழப்பீடு வந்தால், அதை கட்டுவதற்கு போதிய வருமானம் இல்லை. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு செல்ல தயங்குகின்றனர். அரசு வழக்கப்படி மீண்டும் விவசாயிகளுக்கான பணத்தை அவர்கள் கையில் கொடுக்க வழிவகை செய்தால் தான் பயமின்றி வருவார்கள்," என்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.