Skip to main content

அரசு அதிகாரிகளை வேலை வாங்கும் “புகார்பெட்டி” வாட்சப் குழு

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

தமிழ்நாட்டில் எந்த பகுதிகளுக்கு சென்றாலும் குடிநீர் வரவில்லை, சாலைகள் சரியில்லை, தெருவிளக்குகள் எரியவில்லை போன்ற அடிப்படை பிரச்சனைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்றே கூறலாம். மேலும் உள்ளாட்சி தேர்தலும் நடைபெறாததால் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய அரசு அதிகாரிகளும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்படி கண்டு கொள்ளாத அதிகாரிகளை திரும்பி பார்க்க வைக்கிறார்கள் பசுமைத் தமிழ் தலைமுறை அமைப்பினர். இதுவரை கேள்விப்படாத வகையில், புகார்பெட்டி என்ற வாட்சப் குழுவை தொடங்கி இருக்கிறார்கள் இவ்வமைப்பினர். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள  61 ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக “புகார்பெட்டி” என்கிற வாட்சப் குழுவைத் தொடங்கியிருக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமே நிரம்பியிருக்கும் இக்குழு பொதுமக்களுக்கும் அரசுஅதிகாரிகளுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது.
 

whatsapp complaint

 ஒவ்வொரு வாட்சப் குழுவிலும் அந்தந்த ஊராட்சிகளின் அரசு அதிகாரிகளும் இணைந்திருப்பார்கள். அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை இந்த வாட்சப் குழுவில் புகைப்பட ஆதாரத்தோடு தெரிவிக்கிறார்கள். இப்புகாரை குழுவின் அட்மின்கள் உறுதி செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கானத் தீர்வையும் பெறுகிறார்கள். சரியானத் தீர்வை எட்டாத பிரச்சனைகளுக்கு தவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற்றுத் தீர்வு காண்கிறார்கள் இந்த இளைஞர்கள். இதுகுறித்து பசுமைத் தமிழ் தலைமுறையின் இளம் தலைவரான சுகன் கிறிஸ்டோபர் நம்மிடம், “தங்கள் ஊரில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை யார்கிட்ட சொல்றதுனே தெரியாம கடந்து போய்டுறாங்க பொதுமக்கள். இத எப்படியாவது மாத்தனும்னு ஆரம்பிச்சதுதான் புகார்பெட்டி வாட்சப்குழு. இந்தக் குழுவில் தெரிவிக்க கூடிய புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வைப்போம். ஆரம்பத்துல நாங்க இப்படி பண்றத பொதுமக்கள் நம்பாமதான் இருந்தாங்க, இந்த குழு மூலமா ஒருசில அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்த அப்புறம்தான் நம்ப ஆரம்பிச்சாங்க. 
 

இப்ப எந்த ஊர்லயும் குடிநீர் வரவில்லை, தெருவிளக்குகள் எரியவில்லை என்றால் இந்த வாட்சப் குழு மூலமாகவே தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். விவசாயத்திற்கு தண்ணீர் வரவில்லை என்றால், அதையும் அதிகாரிகளிடம் பேசித் தீர்த்து வைக்கிறோம். அதேபோல் அரசு அதிகாரிகளை அழைத்து வந்து மரக்கன்று நடுதல், இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் இந்த 61 ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடப் போகிறோம். மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் வைத்திருக்கிறோம். இனி இளைஞர்கள் கையில் அரசாங்கம் வரவேண்டும்” என்கிறார். இந்த இளைஞர்களின் புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் தவறானவற்றை கற்பதை விடவும் இவர்களைப் போல் மக்களுக்காக வேலை செய்வது, சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல உதவும்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.