river

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மணல் கடத்தல் வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாபு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி வேடியம்மாள் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிபதி எஸ். ராமதிலகம் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கடத்தலை அனுமதிக்கும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அந்த அறிக்கையில் " மணல் கடத்தலை அனுமதித்து முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் லஞ்சம் கொடுக்கும் போது பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மணல் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சட்டத்தை மீறாமலும் பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு ஊழியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் ஒருவர் மீது கூட குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அரசு அதிகாரிகள் மணல் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு 4 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

லாரி ஓட்டுனர் பாபு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தின் மீதான நடைமுறைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அதனடிப்படையில் பாபு மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.