Skip to main content

பக்கத்து வீட்டில் திருட பக்காவாக பிளான் போட்ட அரசு அலுவலர்; விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
A government official who made a plan to steal the house next door and Shocking information revealed in the investigation

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கேசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், ஆயுள் காப்பீட்டு முகவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், ஸ்ரீதர், சுதர்சன் என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (19-02-24) நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் அவர்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணி போல், நடராஜன் கழிவறைக்கு சென்ற போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 

அப்போது, ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த காஞ்சனா, மர்ம நபர் வீட்டின் உள்ளே நுழைவதை பார்த்து சத்தமிட்டுள்ளார். இதனால், பதற்றமடைந்த அந்த நபர், காஞ்சனாவின் கழுத்தை நெறித்தும், கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.  காஞ்சனாவின் அலறல் சத்தத்தை கேட்ட நடராஜனும், அவரது மகன்களும் வெளியே வந்த போது, மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நடராஜன், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்த கடத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, அந்த பகுதியில் மர்ம நபர் அணிந்திருந்த முகமூடி, டி-ஷர்ட், கையுறை போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, நடராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் தயானந்த், மோப்ப நாய்கள் வருவதை அறிந்து அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றார். 

இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர், தயானந்தின் செல்போன் எண்ணை வைத்து, அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய முயற்சி செய்தனர். அப்போது, தயானந்த் அவரது உறவினர்கள் வீட்டில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், தயானந்தை அழைத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தயானந்த் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த தயானந்த், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையை கையாடல் செய்தும், பலருக்கும் மானியத் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை பெற்று ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, உதவி இயக்குநர், தயானந்த்திடம் நடத்திய விசாரணையில், தான் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கையாடல் செய்த பணத்தை மூன்று மாத காலத்திற்குள் ஒப்படைப்பதாகவும், அதற்கு மூன்று மாதம் சம்பளம் இல்லாத வேலை வழங்குமாறு தயானந்த் கூறியுள்ளார். இதற்கு உதவி இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, சத்தியமங்கலம் பகுதியில் அறை எடுத்து தங்கி, கொள்ளை அடிப்பது எப்படி என்பது குறித்து செல்போன் மூலம் தகவல் அறிந்துள்ளார். இதற்கிடையே, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நடராஜன், சொத்து ஒன்றை விற்று ரூ.90 லட்சம் பணத்தை வீட்டில் வைத்துள்ளார் என்பதைத் தெரிந்துகொண்ட தயானந்த், அவரது வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, துணிக்கடைக்கு சென்று முகமூடி, கையுறை போன்றவற்றை தயானந்த் வாங்கியுள்ளார். இந்த நிலையில், நடராஜன் வீட்டில் எங்கு சிசிடிவி கேமரா பொறுத்தியிருக்கிறது என்பதை ஏற்கெனவே தெரிந்திருந்த தயானந்த், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு நேரத்தில் நடராஜன் வீட்டிற்கு கேமரா காட்சி பதிவாகாதவாறு சென்று திருட முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. விவசாயிகளின் மானியத் தொகையை கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க தோட்டக்கலைத்துறை இளநிலை உதவியாளர், பக்கத்து வீட்டில் திருட முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.