Skip to main content

குறையை சுட்டிக் காட்டினால் வழக்கா...? - இளைஞர் மீது புகார் தந்த அரசு நிர்வாகம்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

government officer filed complaint against youth thiruvannamalai

 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இந்திர வனம் கிராமம். இந்த கிராமத்தில் ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நிதியை ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நவம்பர் 10 ஆம் தேதி வாக்கில் நடந்துள்ளது. 36 லட்ச ரூபாய் பணியை எடுத்த சேத்பட் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் குழாய் பைப் மற்றும் குழாய் பைப் நிற்பதற்கான சிமெண்ட்டால் ஆன ஸ்டெம்ப் நட்டுள்ளார். அப்படி நட்டவர் சரியாகப் பள்ளம் எடுத்து நடாமல் மேம்போக்காக நட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

 

இது குறித்து அதே கிராம மக்கள் சிலர் கேள்வி கேட்க, அது அவ்வளவுதான் என ஒப்பந்ததாரர் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணியின் அவலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்கிற படித்த பட்டதாரி இளைஞர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலானதையடுத்து தமிழகத்தில் அதிகாரிகள் செய்யும் பணியின் லட்சணத்தைப் பாருங்கள் என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.

 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது சேத்பட் ஊராட்சி ஒன்றிய அலுவலர்(பி.டி.ஓ) ரேணுகோபால் புகார் தந்துள்ளார். புகாரில் இன்னமும் பணியே முடியவில்லை. அதற்குள் இந்த அவலத்தைப் பார் என வீடியோ வெளியிட்டுள்ளார்கள். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. புகார் வரப்பெற்றது தொடர்பாக சேத்பட் காவல் நிலையத்திலிருந்து சி.எஸ்.ஆர் தரப்பட்டுள்ளது. இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களது மேலிடத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

 

தங்களது கிராமத்தில் இப்படியொரு தரமற்ற பணி நடப்பது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி நந்தகுமாரிடம் இளைஞர்கள் முறையிட்டுள்ளனர். அவர் அதனை கண்டுகொள்ளவில்லையாம். ஊராட்சி மன்றத் தலைவரின் மாமனார் ஏழுமலை அதிமுகவின் சேத்பட் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளாராம். அவர் இதையெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது எனச் சொன்னார், அதனாலேயே வீடியோ வெளியிட்டுள்ளார்கள். குறைகளை சுட்டிக் காட்டினால் அதனைத் திருத்திக் கொள்ளாமல், வழக்கு போட்டு உள்ளே தள்ளுவேன் என்பது என்ன நியாயம் எனக் கேட்கிறார்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.