Skip to main content

பரிதவிக்கவிடும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம்... அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி!!!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அ.தி.மு.க. அரசு 2016-2020ம் ஆண்டில் புதிய மருத்துவ காப்பீடு என்ற பெயரில் அரசாணை எண் 202ன் படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மூலம் ஒரு ஊழியருக்கு ரூ.180/- வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து வந்தது. ஆனால், இத்திட்டத்தின் பயன் நோயாளிகளுக்கு உண்மையிலேயே சென்றதா? என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்கள் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்.
 

insurance


இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியனோ.,

"அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டணமில்லா சிகிச்சை பெறும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன்பின் மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவ காப்பீடில் 8 மடங்கு சந்தா தொகை கூடுதலாக வசூலித்தும் எங்களுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைக்கான முழு பணத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காமல் ஏமாற்றி வருகிறது. தமிழக அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் எம்.ஐ.டி. இந்தியா என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை மாற்றியுள்ளது. 

இந்நிறுவனம் இங்குள்ள பெரிய மருத்துவமனைகளுடன் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை என ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த குறிப்பிட்ட தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பெற்றுக்கொள்வதுடன் மருத்துவமனைகள் கொள்ளை இலாபம் சம்பாதிக்க தங்களிடம் வரக்கூடிய நோயாளிகளிடம் அவர்களின் உயிரை பணயமாக வைத்து மிரட்டி முன்பணம் என்ற பெயரில் அதிகப் பணத்தை பெறுகின்றனர். அதோடு இல்லாமல் சிகிச்சைக்கான முழு தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காமல் மோசடி செய்து வருகிறது.  இந்த மோசடிகள் குறித்து எங்கள் அமைப்பு மூலம் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஜூன் 2016 சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. 

ஆனால் இந்த வழக்கு இதுநாள் வரை நிலுவையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பல நூறு ஆசிரியர்களின் பல்வேறு சிகிச்சையில் எங்கள் அமைப்பு நேரடியாக தலையிட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வாதாடி பல கோடி ரூபாயை ஆசிரியர்களுக்கு பெற்று தந்துள்ளோம். மோசடி செய்த சில புகழ்பெற்ற மருத்துவமனைகளை இத்திட்டத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய காரணமாகியிருக்கிறோம். விழிப்புணர்வில்லாத ஆசிரியர்களிடம் மருத்துவனையும், இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து சிகிச்சைக்கான முழு தொகையை அனுமதிக்காமல்  கோடிக்கான ரூபாயை ஏமாற்றி வருகின்றன. இந்த குறைபாடுகளை களைவதற்கு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களால் எவ்வித பயனும் இல்லை. 

அவர்களை தொடர்பு கொண்டால் உரிய பதிலை அளிப்பதுமில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டிய குறைதீர் கூட்டங்களை அதிகாரிகள் முழுமையாக நடத்துவதில்லை. இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு இதில் தலையிட்டு தவறு செய்கிற மருத்துவமனைகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான கட்டணமில்லா சிகிச்சையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்." என்கிறார் அவர்.

 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Private school's introduced AI teacher in kerala

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. 

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.