Skip to main content

மழைநீரில் தத்தளித்த அரசு மருத்துவமனை; நோயாளிகள் கடும் அவதி

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Government Hospital flooded with rainwater; Patients suffer a lot!

 

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கன மழையால், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், கடும் அவதிக்குள்ளான உள் நோயாளிகள், பாதுகாப்பு கருதி, வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். 

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஆக. 28ம் தேதி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் மாவட்டத்தின் மேலும் சில பகுதிகளிலும் கன மழை பெய்தது. குறிப்பாக, ராசிபுரத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. 

 

ராசிபுரத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்தது. உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், நோயாளிகள் கால்களை தரையில் வைக்கவே பயந்தனர். இதனால் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சூழ்ந்த அறைகளில் இருந்த நோயாளிகள் வேறு அறைகளுக்கு பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

இரவு முழுவதும் உள்நோயாளிகள் கடும் குளிரில் மேலும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஆக. 29) நேரில் ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ராசிபுரத்தில் மட்டும் 200 மி.மீ., மழை பெய்துள்ளது. எதிர்பாராத கன மழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நோயாளிகள் மாற்று அறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும் காலங்களில் மழைநீர் புகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.