Skip to main content

கர்ப்பிணிகளை ஓடி ஓடி கவனிக்கும் அரசு மருத்துவமனை

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

கர்ப்பிணிகள் முதல் நோயாளிகள் வரை அரசு மருத்துவமனை என்று சொன்னதும் அலட்சியம் காட்டுவார்கள். இவர்கள் மத்தியில் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்றதும் கர்ப்பிணிகளுக்கும், நோயாளிகளுக்கும் முகம் மலர்கிறது. 

 

hospital

 

 

இதற்கு காரணம், அந்த ஆஸ்பத்திரியில அப்படி ஒரு கவனிப்பு இருக்கு. யாரையும் நோயாளியாக பார்க்கமாட்டாங்க. எல்லாரையும் சரிசமமா தான் பார்ப்பாங்க. பணத்தை பிடிங்குகிட்டு சிரிச்சுகிட்டே பார்க்கும் தனியார் மருத்துவமனைகளை விட மேலானது செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்கிறார்கள். 
 

மற்ற அரசு மருத்துவமனை போல இருக்காதுங்க, உள்ளே நடைபாதை, பாதை எங்கும் பச்சை பசேல்னு செடி,கொடிகள், ஆங்காங்கே மூலிகை தோட்டம். வளாகத்திலேயே கர்ப்பிணிகளுக்கான இயற்கை காய்கறி, பழத் தோட்டம், பால்மாடு. நோயாளிகளை சோர்வடையவிடாமல் தடுக்கும் புத்துணர்ச்சி ஓவியங்கள் தீட்டிய சுவர்கள். இத்தனையும் தாண்டி மருத்துவர்கள் உள்பட அத்தனை ஊழியர் முகத்திலும் சிரிப்பு. சிடுசிடுப்பு இருக்காது. சுகாதார நிலையத்தில் என்ன மருந்துகள் இருப்பு உள்ளது என்ற அறிவிப்பு பலகை, ஆய்வுக்கூடம், அறுவை அரங்கு, ஸ்கேன் வசதி, சில மாதங்களுக்கு ஒரு முறை வளைகாப்பு திருவிழா. ஒவ்வொரு வாரமும் சத்துணவு, திரும்பிய பக்கம் எங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இப்படி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் என்கிறார்கள் அந்த அரசு சுகாதார நிலையத்தை நன்கு அறிந்தவர்கள்.
    

மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் முதன் முதலில் கர்ப்பிணிகளுக்கு சத்துணவும், வளைகாப்பும் நடத்தினாங்க. அப்புறம் தான் தமிழ்நாடு அரசே மாநிலம் முழுவதும் செய்ய திட்டமிட்டாங்கனா பாருங்க என்றனர்.
இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் செருவாவிடுதி  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான வாராந்திர மருத்துவ பரிசோதனை, மற்றும் ஆலோசனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது அங்கு சென்றோம்.

 
மக்கள் சொன்ன அத்தனை திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் முகாமிற்கு தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் ரஞ்சித், ரிஸ்வானா பேகம், அம்சவாணி, கலைச்செல்வி ஆகியோர் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள், ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து முகாமில், கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள காய்கனித் தோட்டத்தில், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்காமல்  இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள்  வழங்கப்பட்டது. 


இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் கூறும் போது, "தற்போது கோடைகாலமாக இருப்பதால், உடலில் நீர்சத்து குறைவு ஏற்படும். இதனா‌ல் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் இந்த ஆண்டு முதல் இயற்கை தோட்டத்தில் தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்பட்டது. சிறப்பான முறையில் ஏராளமான பழங்கள் விளைந்துள்ளது. இவற்றை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கியுள்ளோம்" மேலும் இங்கு விளைவிக்கப்படும் காய்கனிகளை இங்கு சாப்பிடக் கொடுப்பதுடன் அவர்கள் வீட்டிற்கும் எடுத்து சென்று சாப்பிடவும் கொடுத்து அனுப்புகிறோம். கர்ப்பிணிகள் தற்போது உடல் ஆராக்கியமாக இருந்தால் தான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது. சுயபிரசவம் நடக்கும். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று வரும் 90 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் தான் நடக்கிறது. அதனால் தான் இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடச் சொல்கிறோம். பலருக்கு இயற்கையான காய், கனிகள் கிடைப்பதில்லை அதனால் ரசாயன உரங்கள் பயன்படுத்திய உணவுகளை சாப்பிடுகிறார்கள். அதனால தான் சுகாதார வளாகத்திலேயே காய், கனிகளை விளைய செய்து கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறோம். சுத்தமான நாட்டு மாட்டு பால், நாட்டுக்கோழி முட்டை, வெல்லம் ஆகியவை கொடுக்கிறோம் என்றார். முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், கண் மருத்துவ நுட்பநர் திரவியம், மருந்தாளுநர் சரவணன், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காய்கனிகளோடு கர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி பழம் வழங்கும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.