Skip to main content

கால்வாயைப் புதுப்பிக்க ரூ.144 கோடி ஒதுக்கிய அரசு... ஈரோடு மாவட்டத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம்...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

The government has allocated Rs 144 crore to renovate the canal ... Opinion meeting in Erode district ..


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து வெளியேறும் பாசன வாய்க்கால்களைச் சீரமைக்கும் பணிகளுக்காக, விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கொடிவேரி அணை பாசனத் திட்டத்திற்குட்பட்ட, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலை புதுப்பித்து நவீனப்படுத்தும் திட்டத்திற்கான பணிகளைச் செய்வதற்கு, அரசு ரூ.144 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. 


இந்த நிலையில், சீரமைப்புப் பணிகளுக்காக, வாய்க்காலில் இருந்து வெளியேறும் நீரை நிறுத்த வேண்டுமென பொதுப் பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பாசனப் பகுதிகளில் உள்ள 21 விவசாய கிளைச் சங்கங்களின் உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் 23 -ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி, “வாய்க்கால் கரைகள் மற்றும் மதகுகளைச் சீரமைக்க அரசு ஒதுக்கியுள்ள நிதியைச் சரியான நேரத்தில் பயன்படுத்தி, பயன் பெற அனைத்து விவசாயச் சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். 


மேலும், வாய்க்கால்களில் அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள், மதகுகள், படித்துறைகள் கிளை வாய்க்கால் பிரிவுகள் மற்றும் மழை நீர்ப் போக்கிகள் உள்ளிட்டவற்றை சரியான இடத்தில் அமைக்க வேண்டும். இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை விவசாயிகள் கண்காணிப்பு செய்ய ஈடுபடுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தப் பணிகளை தற்போது நடைபெற்று வரும் முதல்போக பாசனம் முடிந்தபிறகு, வாய்க்கால்களை கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கலாமா அல்லது இரண்டாம் போக சாகுபடி முடிந்த பின்னர் ஒப்படைக்கலாமா என்றும் விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 

 

இரண்டாம் போகம் முடிந்த பிறகு வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டால் அடுத்தாண்டு முதல் போகம் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது நடைபெற்றுவரும் முதல் போக சாகுபடி முடிந்தவுடன், விவசாயிகள் ஒரு போக சாகுபடியைக் கைவிட்டுவிட்டு வாய்க்கால்களின் மேம்பாட்டுப் பணிக்காக, நான்கு மாதங்கள் தண்ணீரை நிறுத்திவைக்கலாம் எனப் பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், சில விவசாயிகள் மாற்றுக் கருத்தைக் கூறியதால், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் நிறுத்தப்பட்டு, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.