Government bus permit denial on National Highway vikiravandi tollgate

Advertisment

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கட்டணம் செலுத்திவிட்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று சிதம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தது.

விக்கிரவாண்டி டோல்கேட் அருகே பிற்பகல் 3 மணியளவில் கடக்க முயன்றபோது சுங்கச்சாவடியில் பணி செய்த ஊழியர்கள் பஸ்சை நிறுத்தி, கட்டணம் செலுத்தினால்தான் பஸ்சை இயக்க முடியும் என்று கறாராக கூறிவிட்டனர். அப்போது அவர்கள் மேலும் கூறும்போது, சிதம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

அந்தப் பணத்தை முழுவதும் செலுத்தினால்தான் பஸ்சை இயக்க முடியும் என்று பஸ்சை விடவில்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கி நீண்ட நேரம் காத்திருந்தனர். பஸ் டிரைவர் கண்டெக்டர் இருவரும் நீண்ட நேரம் சுங்கச்சாவடி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் இது குறித்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஒருவழியாக பஸ்சை சுங்கச்சாவடியைவிட்டு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனால் பஸ் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அரசு போக்குவரத்துக் கழகம் டோல்கேட் கட்டணம் கூட செலுத்த முடியாமல் பல லட்சம் பாக்கி வைத்துள்ளது வியப்பாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசும் அதிகாரிகளும் இதுபோன்று தடங்கல்கள் ஏற்படாமல் சரி செய்வார்களா?