
மதுரையில் அரசு பேருந்து, தாழ்வாக சென்ற மின் கம்பியின் மீது உரசி, சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் உயிர்த் தப்பியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக அரசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பசும்பொன் மூலக்கரை என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்சார வயரில் பேருந்து சிக்கிக் கொண்டது. அதிகாலையில் என்பதால் பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பயணிகள் கூட்டமாக வெளியே வராமல் ஒருவர் ஒருவராக கீழே இறங்கினர். உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் மின் இணைப்பைத் துண்டிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து பேருந்து மின்சார வயரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோத்தகிரி அருகே இதேபோன்று அரசு பேருந்து ஒன்று மின்சார கம்பியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மதுரையில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.