Skip to main content

மறைந்த நக்கீரன் நிருபர் அருள்குமார் குடும்பத்திற்கு அரசு வழங்கிய உதவி 

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Government assistance to the family of late Nakkheeran reporter Arul Kumar

 

நக்கீரன் கோவை மாவட்ட செய்தியாளராகப் பணிபுரிந்தவர் அருள்குமார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

 

அருள்குமாரின் திடீர் மரணம் அவரின் குடும்பத்திற்குப் பேரிழப்பாய் மிகப் பெரிய துயரத்தைக் கொடுத்தது. அருள்குமாருக்கு நிர்மலா என்ற மனைவியும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தமிழ்மதி, பத்தாம் வகுப்பு படிக்கும் இளஞ்சித்திரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். 

 

இந்த நிலையில் நமது நக்கீரன் ஆசிரியர் அவர்கள் கோவைக்கு நேரில் சென்று அருள்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் அருள்குமார் வீட்டுக்கு நேரில் சென்ற ஆசிரியர் அவரது இரண்டு மகன்களின் கல்விச் செலவுக்குத் தனியாக நிதி உதவி வழங்கியதோடு நக்கீரனில் பணிபுரிந்த காலத்திற்கு வழங்க வேண்டிய பணப் பலன்களைத் தனியாகவும் அவரது குடும்பத்தினருக்குக் கொடுத்து நம்பிக்கை கொடுத்தார்.

 

அதோடு அரசு வழங்கும் நிவாரண உதவிபெறும் நடவடிக்கையும் நக்கீரன் அலுவலகம் மூலம் எடுக்கப்பட்டது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் தொடர் முயற்சியால், நக்கீரனில் இருபது வருடம் பணியாற்றிய அருள்குமார் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி ஐந்து லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

 

அதன்படி டிசம்பர் 20ம் தேதி மதியம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் சமீரன், மறைந்த அருள்குமார் மனைவியிடம் ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். கோவை பி.ஆர்.ஓ. செந்தில் அண்ணா அவர்கள் உடனிருந்தார். தமிழக அரசுக்கும் செய்தித் துறைக்கும் நக்கீரன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.