சேலத்தில் கொலை முயற்சி, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் கோரிமேடு, ஜல்லிக்காடு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் கிட்டான் மணி என்கிற மணிகண்டன் (வயது 28). இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. ரவுடியான இவர் கடந்த ஜூன் 18- ஆம் தேதி, கோரிமேட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே ஜெயபிரகாஷ் என்பவர் நடந்து வந்தபோது, அவரை மது பாட்டிலால் தாக்கி, அவரிடம் இருந்த 5,500 ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இந்த வழக்கில் அவரை கைது செய்த காவல்துறையினர், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில், மணிகண்டனும், அவருடைய கூட்டாளி ஒருவரும் கடந்த 2021- ஆம் ஆண்டு, கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த விவேகானந்தன் என்பவரை மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். அப்போது கன்னங்குறிச்சி காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர், பிணையில் வெளியே வந்த அவர், மூர்த்தி என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த வழக்கிலும் கைது செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்ததாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்படி ரவுடி மணிகண்டனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.