தமிழகத்தில் கூகுள் நிறுவனத்தின்செல்போன் தயாரிக்கும் ஆலை உருவாக இருக்கும் நிலையில் விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூகுள் அதிகாரிகள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின்சென்னையில் விரைவில் கூகுள் நிறுவனத்தின் 'பிக்சல்' செல்போன் தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக அமைகிறது. இதற்கானஅறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு நிறுவனம் அமைய உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை வைத்து மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்த்து தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்றுள்ள நிலையில் உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமையில் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக கூகுள் நிறுவன அதிகாரிகள் கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை சென்னையில் அமைக்க முன்வந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வரைவிரைவில் சந்திக்க கூகுள் அதிகாரிகள் சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.