Skip to main content

ஆர்டிஓ அலுவலகம் நெருக்கடி: சரக்கு லாரிகளுக்கு எப்.சி., கிடைப்பதில் புதிய சிக்கல்!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

goods lorry fc problem

 

வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் புதிய உத்தரவால், மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு தகுதிச்சான்று (எப்சி) கிடைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

 

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்), ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பர்மிட், வாகனப்பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விதமான பொது போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இது ஒருபுறம் இருக்க, தற்போது பேருந்து, கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்களை இயக்க வாகன தகுதிச்சான்று பெறுவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

அதாவது, இலகுரக மற்றும் கனரக வாகனங்கள், பதிவு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது அவ்வாகனங்களைச் சுற்றிலும் சிவப்பு நிறத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிரும் ஸ்டிக்கரை, பெங்களூருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்த புதிய நடைமுறையால் சரக்கு லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே தங்கள் தரப்பு அதிருப்தியை தெரிவித்து இருப்பதோடு, இந்த புதிய நடைமுறையை ரத்து செய்யவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்குவதற்கு ஆக. 19- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 

கரோனா ஊரடங்கால் சரக்கு போக்குவரத்தும் பெரிய அளவில் முடங்கியுள்ள நிலையில், கடுமையான வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக லாரி அதிபர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் ஒளிரும் ஸ்டிக்கர்களை பெற வேண்டும் என்பது கூடுதல் செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்றும் கூறுகின்றனர்.

 

goods lorry fc problem

 

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் நம்மிடம் பேசினார். அப்போது அவர், “ஊரடங்கால் சரக்கு லாரிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். ஓடாத லாரிகளுக்கு ஏப்ரல்- ஜூன் வரையிலான காலாண்டு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாகனத்தை சுற்றிலும் சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும், அதையும் குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்றும் அரசு நிர்ப்பந்தம் செய்வதை ஏற்க முடியாது.

 

இந்த புதிய உத்தரவால், தமிழ்நாடு முழுவதும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் தகுதிச்சான்று பெற முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசின் புதிய புதிய உத்தரவால் லாரி அதிபர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. அதனால், சுமை ஏற்பட்டுள்ளதால், அரசு புதிய நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும்,'' என்கிறார் தனராஜ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.