Skip to main content

பூட்டிய வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள்; 31 பவுன் நகைகளுடன் ஓட்டம்! 

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
gold theft near salem police investigation

சேலத்தில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 31 பவுன் நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

சேலம், கன்னங்குறிச்சி தியாகராயன் நகர் மோட்டாங்குறிச்சியைச் சேர்ந்தவர் குமார் (67). இவர், ஜெனரேட்டரை பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு வாரி சீனிவாசன் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணமாகி விட்டது. பொறியாளரான வாரி சீனிவாசன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

கடந்த 21ம் தேதி குமார், தனது மனைவி சிவகாமி, 2வது மகள் மற்றும் பேத்தியுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், சென்னையில் வேலை செய்து வரும் பொறியாளர் வாரி சீனிவாசன், தொடர் விடுமுறை காரணமாக டிச. 24ம் தேதி அதிகாலை சொந்த ஊர் திரும்பினார். நள்ளிரவு ஒரு மணியளவில், வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது தெரிய வந்தது. 

அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். வீட்டுக்குள் உள்ள 2 பீரோக்களை உடைத்து, அவற்றில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தனது பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதற்கிடையே, தகவல் அறிந்த கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். வீட்டு பீரோவில் இருந்த 31 பவுன் நகைகள், 7 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. விரல்ரேகை நிபுணர்கள் நிகழ்விடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். 

வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். சம்பவம் நடந்த பகுதி, அக்கம்பக்கத்து தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.