திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம். அடுத்த ஒரு நாட்களுக்குள் பணி சேர சொல்லி வாய் மொழி உத்தரவு என திருச்சி விமாநிலையம் ஏகப்பட்ட பரபரப்பாக இருக்கிறது.. காரணம் என்ன என்று விசாரித்ததில்..
திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு தினமும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதிஅரேபியா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளில் திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்து கொண்டே இருந்தது. இந்த குற்றசாட்டிற்கு பிறகு ஒரு சில பயணிகள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டும் வந்தது.
ஆனால் பயணிகள் சிலர் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் அடிப்படையில் கடந்த மாதம் 5-ந் தேதி திருச்சி விமானநிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகளின் உடைமைகள் முழுவதையும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு சில பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்வதற்கும், தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி விசாரணையில் இதில் தொடர்புடைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்டேசலு, கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேரும், பயணிகள் 13 பேரும் சிக்கினர். இவர்கள் 19 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். கைதான அனைவரும் மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருந்தது வேலியே பயிரை மேய்ந்த கதை போல் ஆகிவிட்டது. அதிகாரிகளின் செயலால் திருச்சி விமான நிலையத்தின் பெயர் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க தொடங்கினார்கள்.
சி.பி.ஐ. நடத்திய சோதனை எதிரொலியாக திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி திருச்சி சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்சி தவிர வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார். மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் வரும் 12-ந் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த்யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய 5 பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ்குமார் கேசன் ஆகியோரும் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். என்பது குறிப்பிடதக்கது.
இப்படி திருச்சி விமாநிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம் என்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் விமானநிலைய அதிகாரிகள்.
விமானத்தில் தங்கம் கடத்தல் - 41 சுங்க அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
சார்ந்த செய்திகள்
Next Story
திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!
திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.
அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.
ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.
பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.