திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதில் வெளி நாடுகளிலிருந்து தாயகம் திரும்பக் கூடிய பயணிகளில் சிலர் தங்கத்தைக் கடத்திவருவது தொடர் கதையாகிவருகிறது.
அப்படி இன்று (11.12.2021) துபாயிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்தவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி தன்னுடைய உடைமைகள் அடங்கிய பைக்குள் துணி வடிவில் தங்கத்தை ஒட்டி எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அது 255 கிராம் எடையுள்ள 12 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் என்று மதிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து அந்தப் பயணியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.