ADVERTISEMENT

தங்கக் காசு பரிசு! துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொடங்கிவைத்த திட்டம்...

04:43 PM Apr 02, 2020 | kalaimohan

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறிகள் மார்க்கெட் சந்தையில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீடு தேடி வரும் மளிகை பொருட்களை வாங்குபவர்களில், குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு தங்கக் காசு பரிசுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுக்கும் விதமாக சமூக தனிமைப்படுத்தலை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில், தேனி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஊரடங்கு உத்தரவு கடந்த 24-ஆம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே இந்த நோய் தாக்குதலை தவிர்க்க இயலும். மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பொருட்டு வெளியில் வருவதால் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்வதும் அரசின் கடமையாகும். அதனை செயல்படுத்தும் விதமாக, பல்வேறு பகுதிகளில் அவரவர் வீடு தேடி தரமான பொருட்களை, நியாயமான விலையில் கொண்டு சேர்க்க வசதியாக ஏழு சிறிய சரக்கு வாகனங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான மளிகை பொருட்களை நியாயமான விலையில், தங்களின் வீடுதேடி வழங்கும் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு (பொன்னி அரிசி 10 கிலோ, இட்லி அரிசி 5 கிலோ, துவரம் பருப்பு ஒரு கிலோ, உளுந்தம் பருப்பு ஒரு கிலோ, பாசிப் பருப்பு 200 கிராம், புளி கால் கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, மஞ்சள் தூள் 100 கிராம், கல்லுப்பு, தூள் உப்பு ,சர்க்கரை ஒரு கிலோ, கடலை பருப்பு 200 கிராம், பட்டாணி 200 கிராம், சுண்டல் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கடுகு 100 கிராம், மிளகாய் வத்தல் 250 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், பெருங்காயம் 50 கிராம், மல்லித் தூள் 100 கிராம், சாம்பார் பொடி 100 கிராம், வெந்தயம் 100 கிராம், சோம்பு 50 கிராம், தேங்காய் எண்ணெய் 100 மில்லி, நல்லெண்ணெய் 500 மில்லி, சன்பிளவர் எண்ணெய் ஒரு லிட்டர் போன்ற 27 மளிகை பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு) மற்றும் தேவையான பொருட்கள் குறிப்பிட்ட அளவில், தோராயமாக இரண்டாயிரம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது.

இந்த மளிகை பொருள் தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மைய வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு வாங்கிக் கொள்ளலாம்.


இந்தத் தொகுப்பு திட்டத்தில் கூடுதலாக 2000 பொருட்கள் வாங்கும் நபர்களுக்கும், வீடு தேடி வரும் பொருட்களை வாங்குபவர்களுக்கும் பரிசு கூப்பன் வழங்கப்படும். அதைபூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இம்மாத இறுதியில் குலுக்கல் நடைபெற்று தேனி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தலா ஒரு பவுன், அரை பவுன் மற்றும் கால் பவுன் தங்க காசு பரிசாக வழங்கப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இப்படி வீடு தேடி வரும் மளிகைபொருள் குலுக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தபின் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தேனி மற்றும் போடியில் உள்ள அம்மா உணவகங்களை ஆய்வு செய்தார். அப்பொழுது அம்மா உணவகத்தில் மக்களோடு மக்களாக சேர்ந்து ஓ.பி.எஸ். காலை டிபன் சாப்பிட்டார். அப்போது அங்கு உணவு அருந்த வந்த தாய்மார்களிடம் அம்மா உணவகம் குறித்து கேட்டறிந்தார். உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமாரும் அம்மா உணவகத்தில் ஓ.பி.எஸ்.ஸுடன் இணைந்து காலை டிபன் சாப்பிட்டார்.

உடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்பட சில அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT