Gold caught at Chennai air port

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மீட்டிருக்கிறார்கள் சுங்க இலாகா அதிகாரிகள். துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கடந்த சில மாதங்களாகவே சுங்க இலாகாவுக்கு தகவல் கிடைத்தபடி இருந்தது. இதனையடுத்து அரபு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் பன்னாட்டு சிறப்பு விமானங்களில் பயணிக்கும் பயணிகளை சுங்க இலாகா கண்காணித்தபடி இருந்தது.

Advertisment

அந்த வகையில், துபாயிலிருந்து வந்த இண்டிகோ 6E-66 விமானத்தை நேற்று முன்தினம் (18.04.2021) சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 48 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய். மேலும், கனமாக பேக்கிங்க் செய்யப்பட்ட பார்சல் ஒன்று விமான நிலைய கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்துவட்ட வடிவிலான 356 கிராம் எடையுள்ள தங்க ப்ளேட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மதிப்பு 17 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய். நேற்று முன்தினம் மட்டும் விமானம் மற்றும் விமான நிலைய கழிவறையிலிருந்து 1.35 கிலோ எடையுள்ள 65 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளதங்கத்தைக்கைப்பற்றியிருக்கிறது சென்னை விமான நிலைய சுங்க இலாகா.

Advertisment

கரோனா நெருக்கடிகளால் அரபு நாடுகளிலிருந்து இந்திய பயணிகளை அழைத்து வர மீட்பு விமானம் அல்லது சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.நேற்று முன்தினம் மட்டும் அரபு நாடுகளிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ள விமானங்களின் எண்ணிக்கை 20. இதில் 5 விமானங்கள் துபாயிலிருந்து வந்துள்ளன.

பெயர்தான் சிறப்பு விமானங்கள். ஆனால், பெரும்பாலும் தங்ககடத்தலுக்காக மட்டுமே விமான சேவை பயன்படுத்தப்படுவதாக சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு 65 லட்சம் ரூபாய். ஆனால், பிடிபடாமல் தமிழகத்துக்குள் சென்றுவிட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்கின்றனர். தென்னிந்தியாவில் கேரளாவையும் மிஞ்சும் அளவுக்கு தங்க கடத்தல் நடப்பது சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்தான் என்கிற தகவலும் பரபரப்பாக எதிரொலிக்கிறது.