Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; அரசுத்தரப்பு வழக்கறிஞராக ப.பா.மோகன் நியமனம்!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அரசுத்தரப்பு வழக்கறிஞராக பிரபல வழக்கறிஞரான பவானியைச் சேர்ந்த பா.மோகனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

murder

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. கடந்த 23.6.2015ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தன்னுடன் படித்து வந்த தோழி சுவாதியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை.

 

 

மறுநாள் அவர் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல்தான், அவரை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

murder

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது கைதானவர்களில் ஜோதிமணி என்பவர் கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

 

 

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 110 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சிகள் விசாரணை 30.8.2018ம் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து வழக்குகளில் ஆஜராகி வரும் பவானியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான பா.மோகனை, இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

murder

 

இதற்கிடையே, சாட்சிகள் விசாரணை தொடங்கியதால், அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதியை நியமித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார். அவர் பிரபலமான வழக்குகளை வாதாடிய அனுபவம் இல்லாதவர் என்பதால், அவருக்கு உதவியாக இருக்க வழக்கறிஞர் நாராயணன் என்பவரை இணைத்துக்கொள்ள கோகுல்ராஜ் தரப்பினர் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். 

 

 

எதிரிகள் தரப்பில் மதுரையைச் சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, ஆறு உதவி வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நீதிமன்ற அரங்கிலேயே மிரட்டுவதுபோல் உருட்டல் மிரட்டலாக கேள்விகள் கேட்பதில் அவர்களே முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த சம்பவங்களும் அரங்கேறின. 

 

 

எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு இணையாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆவேசம் காட்டாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது, சிபிசிஐடி தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இது ஒருபுறம் இருக்க, சித்ராவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பவானி பா.மோகனை அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞகராக நியமிக்கலாம் கடந்த 18.11.2018ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவின் 'வெப் காப்பி' எனப்படும் இணையதள நகலே கடந்த 12.12.2018ம் தேதிதான் மனுதாரர்களுக்கு கிடைத்தது.

 

 

உயர்நீதிமன்றத்தின் இதற்கான மூல உத்தரவுக்கடிதம் கிடைத்ததை அடுத்து, பவானி பா.மோகனை அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் 18.12.2018ம் தேதியன்று உத்தரவிட்டுள்ளார். 

 

 

இதையடுத்து, இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியும், கொலையுண்ட கோகுல்ராஜின் நண்பருமான வழக்கறிஞர் ராசா.பார்த்திபன், சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிருந்தா, கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அவருடைய அண்ணன் கலைச்செல்வன் ஆகியோர் ஆட்சியரின் உத்தரவு நகல், வழக்கின் கோப்புகள், இதுவரை சாட்சியம் அளித்தவர்களின் விவரங்கள், வாக்குமூல ஆவண நகல்களை வழக்கறிஞர் ப.பா.மோகனை நேரில் சந்தித்து வழங்கினர்.

 

 

இதுகுறித்து வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்டபோது, ''வழக்கு ஆவணங்களை முழுமையாக படிக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த வழக்கில் நீதி பெற்றுத்தரப்படும்,'' என்றார்.

 

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று, வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணையை நடத்துவார் எனத்தெரிகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

 

Next Story

மருத்துவமனையில் கொடூரம்; இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

 young girl incident at Hospital

 

திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் சத்தியஸ்ரீ (21). இவர் திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (21) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் தான் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு வந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நரேந்திரன், சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப்போகவே ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயின் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும், அவர் சத்தியஸ்ரீயின் கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் சத்தியஸ்ரீ படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர், நரேந்திரன் அந்த கத்தியை வைத்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.

 

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த அந்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்தியஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மேலும், நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சத்தியஸ்ரீக்கும், நரேந்திரனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நரேந்திரன், சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு, தான் வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயை குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது.